tamilnadu

img

அரசு கடைப்பிடிக்கும் சாதிய பாகுபாட்டை உடைக்க உறுதியேற்போம்! - சின்னை பாண்டியன்

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் சில பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் வேலைபார்க்கும் ஊழியர்கள் பெரும்பகுதி தனியார் நிறுவனத்தில் காண்ட்ராக்ட் ஊழியர்களாக பணிபுரிகின்றனர். நகராட்சி, மாநகராட்சி இத்திட்டத்தை தனியார் கைகளில் விட்டுவிட்டு தங்கள் பொறுப்பில் இருந்து விலகுகின்றன. பொது சுகாதாரத்தை பேணிப் பாதுகாக்கும் பணியில் தனியாரை ஈடுபடுத்துவது எந்த விதத்தில் நியாயம்?. பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்புகள் மற்றும் கழிவுகளை அகற்றுவதில் இன்னும் மனிதர்களே இறங்கி வேலை செய்யும் அவலம் தொடர்கிறது. கையால் மலம் அள்ளுவதை, பாதாள சாக்கடையில்- மலக்குழியில் மனிதன் இறங்குவதை 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தடுக்கிறது. அது சட்டப்படி குற்றம் என்று சொல்கிறது. ஆனாலும் இத்தகைய பணிகளில் மனிதர்களை அதிலும் குறிப்பாக தலித், அருந்ததிய சமூக மக்களை அரசு நிர்வாகம் ஈடுபடுத்தி வருகிறது. 

458 பேர் பலி

சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த அறிக்கையின்படி, 2018 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் 458 பேர் இதுவரை மலக்குழியில் மரணமடைந்துள்ளனர். அதில் 44 சதவீதம் தமிழகத்தில் தான் நடந்துள்ளது என்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. சந்திரனுக்கும், செவ்வாய்க்கும் விண்கலம் அனுப்பும் விஞ்ஞானம் வளர்ந்தாலும் மரணங்களை தடுக்க, மனிதர்களை இழக்காமல் இயந்திரங்களை உருவாக்க ஏன் அரசாங்கங்களுக்கு தயக்கம்?. ஏனென்றால் சாகும் உயிர் எல்லாம் தலித் மக்கள் உயிர்கள் தானே என்று கருதுகிறார்கள். இது அரசு கடைபிடிக்கும் சாதியப் பாகுபாடு ஆகும்.  தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சிஐடியு, உள்ளாட்சி தொழிலாளர் சங்கமும் மலக்குழியில் மனிதனை இறக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அமலாக்க வேண்டும் என தொடர்ந்து போராடி வருகின்றன.

கும்பகோணம் சம்பவம்

இந்நிலையில் தான் தமிழகத்தில் சிறந்த நகராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கும்பகோணம் நகராட்சியில் கடந்த 14 .11.19 அன்று மாலை பாதாள சாக்கடையில் இறங்கிய சாதிக்பாட்சா மரணமடைந்துள்ளார். 2017 ஆம் ஆண்டு பாதாள சாக்கடையில் அடைப்பை நீக்கும் இயந்திரம் கும்பகோணம் நகராட்சி வாங்கியது. ஆனால் அது என்ன ஆனது என்று தெரியவில்லை. இந்த சிறந்த நகராட்சி சாதிக் பாட்ஷாவின் உயிரை காவு வாங்கியுள்ளது. சாதிக் பாட்சா மரணத்திற்கு நீதி கேட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு உள்ளாட்சி ஊழியர் சங்கம் மற்றும் தலித் அமைப்புகள் போராடி நகராட்சி அதிகாரிகள் மீது வழக்கு பதிய வைத்துள்ளனர். ரூ. 11.50 லட்சம் இழப்பீடும் பெற்றுத் தந்துள்ளன. மேலும் ரூ.10 லட்சம் இன்ஃப்ரா நிறுவனம் தருவதை உறுதிப்படுத்தியுள்ளனர். 

வழிகாட்டுகிறார் தோழர் வீரய்யன்

வளர்ந்த நாகரிக சமூகத்தின் அடையாளமாகும். இந்த நேரத்தில் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் பண்ணை அடிமைத்தனத்தை எதிர்த்து சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்து தீரமிக்க போராட்டத்தை நெஞ்சில் ஏந்திட வேண்டும். செங்கொடி இயக்கத்தின் தல நாயகர்களில் ஒருவரான தோழர் கோ.வீரய்யன், நிலப்பிரபுக்கள், பண்ணையாளர்களின் கடும் ஒடுக்குமுறையை எதிர்த்து அன்றைக்கு பெரும்பகுதி கூலி அடிமைகளாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்களை அணிதிரட்டி சாணிப்பால், சவுக்கடி ,தோளில் துண்டு போட முடியாத -முழங்காலுக்கு கீழ் சேலை கட்ட முடியாத -ரவிக்கை போட முடியாத- கடைகளில் சமமாக உட்கார முடியாத- போன்ற தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக களத்தில் வீரச்சமர்  புரிந்தவர் தோழர் கோ.வீரய்யன். அப்படிப்பட்ட மாபெரும் மக்கள் தலைவரை முதன் முதலில் பார்த்த போது தோளில் சிவப்பு துண்டுடன் கையில் ஒரு பையுடன் ஒரு சாதாரண ஏழை விவசாயி போல் வந்தார்.  இவர் யார் என்று கேட்டபோது இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர், விதொச மாநில, அகில இந்திய தலைவர்களில் ஒருவர் என்று சொன்னபோது மலைத்துப் போய்விட்டேன்.

ஒரு சாமானியன் போல் ஒரு கம்யூனிஸ்ட்டுக்கான இலக்கணத்துடன் நடந்து சென்றார். அதன் பிறகு மாணவர் சங்கம், வாலிபர் சங்கம், கட்சிப் பொறுப்புகளில் பணியாற்றியபோது அந்த மாபெரும் தலைவரோடு நெருங்கி பேசவும் அவரின் வழிகாட்டுதலில் செயல்படும் வாய்ப்புகள் கிடைத்தது.  அந்த மாபெரும் தலைவரும் அவருடைய சக தோழர்கள் பி.எஸ். தனுஷ்கோடி,கோ.பாரதிமோகன், எம். செல்லமுத்து, போன்ற தலைவர்களின் பங்கு ஒன்றுபட்ட தஞ்சையின் இன்றைய உழைப்பாளி மக்களின் வாழ்க்கை உயர்விற்கு காரணமாகும்.

ஒப்பீட்டளவில் தமிழகத்தில் சாதியக் கொடுமையும், தீண்டாமைக் கொடுமையும் தஞ்சை மாவட்டத்தில் குறைந்திருப்பதற்கு காரணம் தோழர் கோ.வீரய்யன் போன்ற தலைவர்கள். கூலித் தொழிலாளர்களுக்கும் குத்தகை விவசாயிகளுக்கும் மூன்று லட்சம் ஏக்கர் நிலம் சொந்தம் ஆக்கியது மாபெரும் சாதனையாகும். ஆனால், இன்று என்ன நடக்கிறது? சாதியப் படிநிலையை பாதுகாக்க இந்துத்துவ ஆட்சியாளர்கள் முயல்கிறார்கள். இன்றைக்கு நிலவும் நவீன தீண்டாமைக்கொடுமைகளை அங்கீகரிக்கிறார்கள். தூண்டிவிடுகிறார்கள்.இத்தகைய ஆட்சியாளர்களின் உச்சபட்ச அலட்சியம்தான் நீடிக்கும்  மலக்குழி மரணங்கள். இது அரசே ஏவும் தீண்டாமை. இதுபோன்றவற்றை ஒழிக்க தோழர் கோ.வீரய்யன் வழியில் போராடுவோம்.